பொத்தேரி: எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்திய ‘சொல் தமிழா சொல் - 2025'பேச்சுப்போட்டியில், கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தனித்திறனை வெளிப்படுத்தினர். இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ‘சொல் தமிழா சொல்- 2025' என்ற மாநில அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.
தமிழகமெங்கும் தமிழில் பேச்சுத் திறன்மிக்க கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்கத்துடன் எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் சார்பில் இப்போட்டி நடத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு முதல் இந்தபோட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த பேச்சுப் போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் முதல் மண்டலமாக சென்னை மண்டலத்துக்கான பேச்சுப் போட்டி காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 15-க்கும் மேற்பட்ட நடுவர்களை கொண்டு பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியை சேர்ந்தஎஸ். பாண்டி கணேஷ், முதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றார்.
இரண்டாம் பரிசாக புனித ஜோசப் பொறியியல் கல்லூரி இல. சஞ்சனா, ரூ. 75,000, 3-ம் பரிசாக சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த சு.சதீஸ்குமார் ரூ.50,000 பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் ‘சொல் தமிழா சொல்' பேச்சுப் போட்டியை நடத்துகிறது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 40 லட்சம் பரிசுத் தொகையுடன் மிக பிரம்மாண்டமாக பேச்சுப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் பிரிண்ட் மீடியா பார்ட்னராகவும், புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் போன்ற தொலைக்காட்சிகள் மீடியா பார்ட்னராகவும் இருந்து நிகழ்ச்சியை நடத்தின.