கல்வி

ஜன. 15 நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜனவரி 15 அன்று நடத்தப்பட இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை இயக்குநர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, ஜனவரி 15, 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் நலனுக்காக, தேசிய தேர்வு முகமை ஜனவரி 15, 2025 அன்று மட்டும் திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் தேர்வு ஏற்கனவே அறிக்கப்பட்ட அட்டவணையின்படி நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடந்த ஜன.7 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், “பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது. அப்போதுதான், அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது.

ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

SCROLL FOR NEXT