கல்வி

கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வை நாளை நடத்த உத்தரவு

செய்திப்பிரிவு

கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை நாளை (டிச.21) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் டிச.12-ம் தேதி மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

எனவே, அந்த நாளில் நடைபெறவிருந்த அரையாண்டு பாடத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.12-ம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் நாளை (டிச.21) நடத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT