சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் (ஐடி), இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான டிஆர்பி தேர்வு பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுமூலம் நிரப்பப்படுகின்றன. வழக்கமாக ஒப்பந்த சட்டம், சொத்து சட்டம், குற்றவியல் சட்டம், தொழிலாளர் மற்றும்நிர்வாகவியல் சட்டம் உள்ளிட்ட சட்டம்தொடர்புடைய பாடங்களிலும் ஆங்கிலம், சமூகவியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய சட்டம் சாராத பாடப்பிரிவுகளிலும் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
முதல்முறையாக... இந்நிலையில், முதல்முறையாக தகவல் தொழில்நுட்பம் (ஐடி) , இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கும் உதவி பேராசிரியர்களை நியமிக்க சட்டத்துறை முடிவுசெய்துள்ளது. அந்த வகையில், உதவி பேராசிரியர் பதவியில் தகவல் தொழில்நுட்பம், இணை பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய 3 பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்டத்தை தமிழக அரசின் சிறப்பு அரசிதழில் (அக். 15-ம் தேதி) சட்டத்துறை செயலர் எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான (56காலியிடங்கள்) அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த மாதம் வெளியீடு: தற்போது புதிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டிருப்பதால், வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்தமாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.