சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு, வயது வரம்பில் தளர்வு உள்ளிட்ட விதிமுறைகளை தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் செயல்படுத்துமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் எஸ்.நாகராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகள் உரிமைசட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அத்துடன்,அதிகபட்சவயது வரம்பிலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட வேண்டும். தவிர, அவர்கள் தங்கள் அன்றாடசெயல்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்ள தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் இடவசதியும் செய்து தரப்பட வேண்டும்.
அதேபோல, தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் மாற்றுத் திறனாளிகள் நலனைகருத்தில் கொண்டு, அவர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு, வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு, தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.