சென்னை: ஐஐடியில் படிப்புகளில் விளையாட்டு இடஒதுக்கீட்டை தொடர்ந்து விரைவில் கலாச்சார ஒதுக்கீடும் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளோம். இதேபோல், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் கலாச்சார இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்படும். இது எனது செயல்திட்டங்களில் ஒன்று.
இந்த ஒதுக்கீடு மூலம் இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பயன்பெறுவர்”, என்று அவர் கூறினார். தற்போது ரயில்வே உள்ளிட்ட ஒருசில மத்திய அரசு பணி வேலைவாய்ப்புகளில் கலாச்சார ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.