வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர் ஹார்வி ஸ்டிங்கர். 
கல்வி

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: பிங்ஹாம்டன் பல்கலை. வழங்கியது

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் விஐடி பல்கலை. வேந்தர்கோ.விசுவநாதனுக்கு, அமெரிக்காவில் உள்ள பிங்ஹாம்டன் பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

சர்வதேச அளவில் உயர்கல்வி வளர்ச்சிக்காக கோ.விசுவநாதன் ஆற்றி வரும் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2009-ல் அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் வெர்ஜினியா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பிங்ஹாம்டன் பல்கலைக்கழகமும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. அதனடிப்படையில், கடந்த 10-ம்தேதி பிங்ஹாம்டன் பல்கலை.யில் நடைபெற்ற விழாவில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிங்ஹாம்டன் பல்கலை. வேந்தர் ஹார்வி ஸ்டிங்கர் வழங்கினார்.

விழாவில், நியூயார்க் மாகாண சட்டமேலவை உறுப்பினர் டொன்னா எ.லுப்பாடோ, செனட்உறுப்பினர் லியாவெப், முதல்வரும், பேராசிரியருமான ஸ்ரீஹரி கிருஷ்ண சாமி, இணைவேந்தர் டொனால்டு ஹால் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

விஐடி மற்றும் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுவதற்கு காரணமான பேராசிரியர் ஸ்ரீஹரி கிருஷ்ணசாமி பாராட்டப்பட்டார். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், விஐடிசர்வதேச உறவுகள் துறை இயக்குநர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாஷிங்டனில் பாராட்டு விழா: இதேபோல, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், செனட் உறுப்பினர் கண்ணன் ஸ்ரீனிவாசன், அமெரிக்காவுக்கான இந்திய தூதரக கல்விப் பிரிவுத் தலைவர் பி.கருணாகரன், வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் பாலசுவாமிநாதன், ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இணைவேந்தர் பிரபு டேவிட், மாண்ட்க்ளேர் மாநில பல்கலை. முன்னாள் மூத்த பேராசிரியர் ஜெயச்சந்திரன், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை. துணை முதல்வர் ஸ்ரீதேவி சர்மா, அர்கன்சாஸ் பல்கலை. மூத்த பேராசிரியர் பன்னீர்செல்வம் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT