புதுச்சேரி: தனியார் பள்ளி மாணவர்களுக்கு தருவதைப் போல் அரசு பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை தர கல்வித் துறை தகவல்களை திரட்டி வருகிறது.
புதுவை அரசு ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 7,600, கல்லூரி, பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.30 கோடி அரசு செலவிடுகிறது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியின 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் ஏற்பதன் கீழ் கல்வி உதவித் தொகை திட்டமாக தலா ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இத்தொகை வழங்கப் படுவதில்லை. இது குறித்து முதல்வர் ரங்கசாமி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு இந்த ஆண்டே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்கள் பற்றிய விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கேட்டுள்ளது.
மாணவர்கள் பராமரிப்பு தொகை பெற ஜனவரி 10-ம் தேதிக்குள் தகவல்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரிய தர்ஷினி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்கள் பள்ளிகள் மூலம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படவுள்ளன.