சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் 757 பேரை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை.
ஆனால் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு பணி நியமனம் செய்யலாம். ஆசிரியர் பணியிடங்களை கணக்கில் கொண்டு பிரதி ஆண்டு ஜூன்.30-ம் தேதிக்குள் பணி நியமனங்களை முடிக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முழு விவரங்களுடன் காலிப் பணியிட மதிப்பீட்டை அரசின் அனுமதிக்கு அனுப்ப வேண்டும். அதேபோல தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை, பணியிடங்கள் காலியாகவுள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.
அப்போது குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் குறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பணி நியமனங்கள் நடைமுறை பின்பற்றப்பட்ட பின்னர், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.