கோவை: பொய் குற்றச்சாட்டுகளின்பேரில், போக்சோ வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, ஆலாந்துறையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஆனந்தகுமார். இவர் மீது அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் சீண்டல் புகார் அளித்ததன் பேரில், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் ஆனந்தகுமார் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரை விடுவிக்கக்கோரி அப்பள்ளி மாணவர்கள் கோவை-சிறுவாணி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் காவல்துறையி னர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாணவர்கள் கலைந்து சென்றனர்.