உதகை: உதகையில் ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம், பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, கோவை மாவட்ட கல்வி இயக்கக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சுமார் 4,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான ஏழை, எளிய மாணவர்கள், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசுக் கல்லூரியில் சேரவும், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேரவும் மாணவர்களிடம், பேராசிரியர்களும், முதல்வரும் பணம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர் ஒருவரிடம், அரசுக் கல்லூரி முதல்வர் பணம் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்கக துணை இயக்குநர் கலைச் செல்வி கூறியதாவது: உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக சில பேராசிரியர்கள் பணம் பெற்றதாக கிடைத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டோம். இது தொடர்பான அறிக்கையை விரைவில் உயர்கல்வி இயக்குநர் மற்றும் கல்வித் துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.
தற்போது ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்காக கல்லூரி முதல்வர் பணம் கேட்பது போல வீடியோ வெளியானதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும், என்றார்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் கூடலூரில் மட்டுமே அரசு கலைக் கல்லூரி உள்ளது. தனியார் கல்லூரிகள் இல்லாத நிலையில், அனைத்து மாணவ, மாணவிகளும் இவ்விரு கல்லூரிகளில்தான் சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது. உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர பேராசிரியர்களும், கல்லூரி முதல்வரும் பணம் கேட்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.