தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தாங்கள் தேர்ச்சியடைந்ததை அறிந்து உற்சாகமடைந்த மாணவிகள். படம்:எஸ்.குரு பிரசாத்
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8.70 லட்சம் மாணவர்களில் 94.31 சதவீதம் பேர் வரை தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவிகளே இந்த ஆண்டும் தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 4,219 மையங்களில் கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வெழுத 8 லட்சத்து 81,817 பள்ளி மாணவர்கள் பதிவுசெய்தனர். அவர்களில் 4 லட்சத்து 35,396 மாணவர்கள், 4 லட்சத்து 35,247 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 70,643 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களால் 11,174 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களில் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலமும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டன. மேலும், செய்தித் துறை மூலமாக வாட்ஸ் அப் வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 4 லட்சத்து 19,891 மாணவிகள், 4 லட்சத்து 1,214 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 21,105(94.31%) பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (93.80%) 0.51 சதவீதம் அதிகமாகும். மாணவர்கள் 92.15 சதவீதமும், மாணவிகள் 96.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 4.32 சதவீதம் அதிகம்.
இதுதவிர மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த தேர்ச்சியில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை(97.54%), தஞ்சாவூர்(97.41%), திருச்சி (97.31%) மற்றும் கன்னியாகுமரி (97.30%) அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. கடைசி இடத்துக்கு ராணிப்பேட்டை (86.68%) பின்தங்கியுள்ளது. தலைநகரான சென்னையில் 92.34 சதவீதம் தேர்ச்சி வந்துள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவில் சிவகங்கை(97.42%) மாவட்டம் முதலிடமும், புதுக்கோட்டை(97.09%), தஞ்சாவூர்(96.89%) 2, 3-ம் இடங்களையும் பெற்றுள்ளன. மேலும், அரியலூர் (82.40%) மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல், பொதுத்தேர்வில் 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 1,931 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 5,171 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளன. 2025-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4,917-ஆக இருந்தது. தனித்தேர்வர்களைப் பொருத்தவரை 24,353 பேர் தேர்வெழுதிய நிலையில் 8,744(35.91%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மொத்தம் 13,292 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் 11,416(85.89%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 370 சிறை கைதிகள் தேர்வு எழுதியதில் 354 பேர் (85.89%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்டம் விவரம்: எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழ் பாடத்தில் 34 மாணவர்கள் முழு மதிப்பெண்(சென்டம்) பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேபோல், ஆங்கிலத்தில் 92 பேரும், கணிதத்தில் 3,194, அறிவியலில் 10, 476, சமூக அறிவியலில் 3,336 என ஒட்டுமொத்தமாக 17,132 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் இதில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும். இதையடுத்து மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 22-ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமும் அவரவர் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி மே 22 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி ஜூன் 17 முதல் 19-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.இதற்கிடையே பொதுத்தேர்வை எழுத முடியாதவர்கள், தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே உயர்கல்வியை தொடருவதற்கு ஏதுவாக ஜூலை 8 முதல் 15-ம் தேதி முதல் துணைத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு மே 26 முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in எனும் வலைத் தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சியில் அரசுப் பள்ளிகள் 91.86 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண், தோல்வி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் தயக்கமின்றி அரசின் இலவச உதவி மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல், தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை பள்ளிக்கல்வியின் 14417 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.