கல்வி

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புக்கு 66,696 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு 66,696 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன.

அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த இடங்களுக்கு 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது. இதில், மொத்தம் 66,696 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தகுதியான மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT