கோப்புப்படம் 
கல்வி

பி.இ, பி.டெக் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு - அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி அறிவிப்பு

இ.ஜெகநாதன்

காரைக்குடி: பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டதாக மாணவர் சேர்க்கை செயலாளரும், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி முதல்வருமான பழனி தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: பாலிடெக்னிக், பிஎஸ்சி கணிதம் முடித்த மாணவர்கள் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். இதற்கான கலந்தாய்வை ஆண்டுதோறும் காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறது. இந்தாண்டு அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 60,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியாக கடந்த ஜூன் 1-ம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதி கடைசி நாள் என இருந்த நிலையில் ஜூலை 7-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் சரிபார்ப்பு முடிந்து ஜூலை 31-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கு மாணவர்கள் நேரில் வரத் தேவையில்லை. தங்களது விண்ணப்ப நிலையை இணைய வழியாகவே தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்டில் இணைய வழியாக கலந்தாய்வு தொடங்கும். சிறப்பு கலந்தாய்வு, பொது கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 94436 61901, 98431 53330 -ல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT