சென்னை: இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி. போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிங்காம்டன் (Binghamton) பல்கலைக்கழகத்துடன் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹார்வி ஸ்டென்ஜர் மற்றும் சாஸ்த்ராவின் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்ரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர். பிங்காம்டன் பல்கலையில் நடைபெற்ற இவ்விழாவில் இன்ஜினியரிங் டீன் கிருஷ்ணசாமி ஸ்ரீஹரி மற்றும் திட்டமிடல் துறைத் தலைவர் மதுசூதன் கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிங்காம்டன் மூலம் 2+2 ஆண்டு இளங்கலை படிப்பும், சாஸ்த்ரா மற்றும் பிங்காம்டன் உடன் இணைந்த 3.5+1.5 ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை படிப்பும், ஆசிரியர்களுக்கான கல்வி விடுப்பு மற்றும் இணைந்த பிஹெச்டி போன்றவையும் இந்த ஒத்துழைப்பின் மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகும்.
பிங்காம்டன் பல்கலையின் தலைவர் ஸ்டென்ஜர் கூறும்போது, ``பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் இவ்வேளையில் செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம் பிங்காம்டன் பல்கலைக்கழகம் இந்தியாவுடனான தனது ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைகிறது'' என்றார்.
``எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, பயோமெடிக்கல் டிவைசஸ் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜி ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இவை இந்தியாவின் செமி கண்டக்டர் போன்ற மிக முக்கிய திட்டங்களுடன் இணைந்து செயல்படத் தக்கதாகும்'' என்று சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 20, 2023 அன்று கையெழுத்தானது. இதன் திட்டங்கள் 2023-24 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும். ஸ்ரீதஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் - நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.