கார்த்திக், குமரகோபால், பிரகாஷ், ரமேஷ், சூர்யா.
சென்னை: வீட்டிலிருந்த 129 பவுன் தங்க நகைகளை சிறுகச் சிறுக திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணால் மதுரவாயலில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரவாயல் ஏரிக்கரை லட்சுமி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் சமீபத்தில் இறந்துவிட்டார்.
இவருக்கு மனைவி, 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்ச்செல்வனின் சகோதரர் பன்னீர்செல்வன் வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மேலும் தனது 22 பவுன்நகைகளை அண்ணியிடம் கொடுத்துவைத்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை சரிபார்த்தபோது, பன்னீர்செல்வனின் நகை மற்றும் அண்ணியின் 107 பவுன் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் விசாரணையில் தமிழ்ச்செல்வனின் 3-வது மகள், அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது.
அப்போது கார்த்திக் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், அந்தப் பெண் வீட்டில் யாருக்கும் தெரியாமல் சிறுகச் சிறுக அனைத்து நகைகளையும் பணத்தையும் திருடி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
அந்த நகைகளை கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் விற்றுள்ளார். விலை உயர்ந்த செல்போன், பைக், கார் வாங்கி உல்லாசமாக வாழ்ந்துள்ளார்.
இதையடுத்து, கார்த்திக், அவரது நண்பர்களான ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த குமரகோபால் (20), ஆவடி பிரகாஷ் (22), ரமேஷ் (47) மற்றும் மாத்தூர் சூர்யா (28) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், 1 செல்போன், 1 பைக் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காதலனிடம் நகைகளை கொடுத்த பெண்ணிடமும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.