சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பெண் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவர் மீனம்பட்டி அருகே சுந்தர்ராஜபுரத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்று வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரத்தடியில் வைத்து திறந்தவெளியில் வெடிமருந்து கலவை செய்ததால், வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மரம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத்தால் 100 அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது.
விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த பெண் தொழிலாளி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.