சென்னை: வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே, சாலையோரம் 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று உடலில் காயங்களுடன் அதே பகுதியில் மயங்கிகிடந்தார்.
அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் மூதாட்டியை பரிசோதித்த போது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர்கள் வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸார் மருத்துவமனைக்கு சென்று மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக, வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், ‘பாதிப்புக்குள்ளான மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி வேளச்சேரி பேருந்து நிலையம் பூங்கா பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார்.
அப்போது, ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றும் பிஹாரைச் சேர்ந்த மதப் (30) மற்றும் ஆதில் (28) ஆகிய 2 பேர் குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.