கத்தியால் குத்துவதற்கு முன்பு வீரா.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்த மணிகண்டன்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன் (55). பைனான்ஸ் தொழில் செய்து வருவதுடன், பழநி அருகேயுள்ள புஷ்பத்தூரில் சிபிஎஸ்இ பள்ளியையும் நடத்தி வருகிறார்.
வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் காரை மறித்து, சால்வை அணிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். காரில் இருந்து இறங்கிய வீரா.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்த இளைஞர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமிநாதனின் கழுத்தின் பின்பகுதியில் குத்தினார்.
அப்போது, அருகில் இருந்த காளனம்பட்டி நாச்சிமுத்து (57) இதைத் தடுக்க முயன்றார். அவரையும் அந்த இளைஞர் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே, அருகில் இருந்த வீரா.சாமிநாதனின் ஆதவாளர்கள் அந்த இளைஞரைப் பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர். காயமடைந்த வீரா.சாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
3 பேரிடம் விசாரணை: போலீஸார் நடத்திய விசாரணையில், கத்தியால் குத்திய நபர் திண்டுக்கல் வெயிலடிச்சாம்பட்டி மணிகண்டன் (20) என்பதும், வீரா.சாமிநாதனின் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.