கைதானவர்கள்.
சென்னை: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கி ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கம், மசூதி தெருவில் வசித்து வருபவர் முகமது உபேஸ் (38). திருவல்லிக்கேணி, அருணாச்சலம் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 9-ம் தேதி இரவு, சென்னை, பர்மா பஜாரில் உள்ள தனது நண்பரிடமிருந்து ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கினார். பின்னர் அதை பையில் வைத்துக் கொண்டு பைக்கில் அலுவலகம் திரும்பினார்.
அலுவலகத்தில் பைக்கை நிறுத்தும் நேரத்தில் அவரை ஏற்கெனவே பின் தொடர்ந்து வந்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் முகமது உபேஸை தாக்கி அவரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பினர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் முகமது உபேஸை தாக்கி வழிப்பறி செய்தது கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (25), தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நிதிஷ்குமார் (20) என்பது தெரிந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து, இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.