கைது செய்யப்பட்ட செல்வராஜ், சுரேஷ்.
சென்னை: சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் செயல்படுகிறது.
இந்த சங்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் வசிக்கும் 21 ஆயிரம்பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த சங்கத்தின் பெயரில் போலியான வாட்ஸ்அப் குழு ஆரம்பிக்கப்பட்டு அதில் சங்கத் தலைவர் ஆனந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களின் மனைவிகள், மகள்கள் தொடர்பாக தொடர்ந்து அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து சங்கம் பெயரில் போலி வாட்ஸ்அப் குழு தொடங்கி, அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வந்த போரூரைச் சேர்ந்த செல்வராஜ், சுரேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.