கார்த்திக், கோகுலகிருஷ்ணன்
சென்னை: பக்ரீத் சலுகை என்ற பெயரில் குறைந்த விலையில் செல்போன் விற்பதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்டம் எல்லீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன் (32). இவர் கடந்த மே மாதம் 25-ம் தேதி முகநூலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குறைந்த விலையில் செல்போன்கள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் ஒன்று வந்தது.
அதில், ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய செல்வநாதன், செல்போனை வாங்குவதற்காக ரூ.22 ஆயிரத்தை இணையவழியில் செலுத்தினார்.
அடுத்த வாரம் செல்போன் டெலிவரி செய்யப்படும் என அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரம் கடந்தும் செல்போன் வரவில்லை. விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த இணையதள முகவரியை தொடர்புகொள்ள முயன்றபோது அது போலியானது என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வநாதன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், திருவல்லிக்கேணி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரும் இணைந்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் மோசடி கும்பலை தேடினர்.
விசாரணையின் அடிப்படையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (35), மேடவாக்கம் ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (32) ஆகிய 2 பேரை கடந்த 28-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் விசாரணையில், கார்த்திக் செல்போன் உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்ததும், கோகுலகிருஷ்ணன் மாடம்பாக்கத்தில் செல்போன் மற்றும் லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் இணைந்து முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் செல்போன்கள் விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர்.