சென்னை: முதல்வர் விஜய், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 13-ந் தேதி நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக வியாசர்பாடி எருக்கஞ்சேரி பிரதான சாலை, சாஸ்திரி நகர் மார்க்கெட் எதிரே போக்குவரத்து போலீஸார் இரும்பு சாலைத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் சில தடுப்புகள் அந்த பகுதியில் அகற்றப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 3 பேர் அந்த சாலைத் தடுப்புகளை வலுக்கட்டாயமாக இடித்துத் தள்ளி சேதப்படுத்தினர்.
இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், அதைப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு பாதுகாப்பு பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு எம்.கே.பி. நகர் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சம்பவத்தில் ஈடுபட்டது வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (28), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரஜினீஸ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.