திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்கம்பி அறுந்துவிழுந்து கணவன், மனைவி மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழந்தனர்.
ஆத்தூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (41). கொத்தனார். இவரது மனைவி சுதா (37). இவர்கள் அப்பகுதியில் உள்ள மாடி வீட்டில் குடியிருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வீட்டு மாடியில் மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதை அறியாமல் கருப்பையா அதை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்தது. இவரின் அலறல் சத்தம் கேட்டுவந்த மனைவி சுதா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களை காப்பாற்ற கீழ் வீட்டில் இருந்து வந்த கல்லூரி மாணவர் சுப்பிரமணிய சிவா (18) மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.