விருத்தாசலம்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த லக்கூர் பகுதியில் தனியார் வேளாண்மைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தரணிசெல்வன் (20), சிதம்பரம் நிஷாந்த் (20), திருவண்ணாமலை விநாயகமூர்த்தி (20), செங்கம் சசிக்குமார் (20), திண்டிவனம் மேல்பாக்கம் ராஜேஷ் (18), திருச்சி மாவட்டம் லால்குடி மதுப்பிரியன் (19) ஆகியோர் பி.எஸ்சி. பயின்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அவர்கள் 6 பேரும் காரில் எழுத்தூர் அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி, எதிர் திசையில் வந்துகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த தரணிச்செல்வன், விநாயகமூர்த்தி, நிஷாந்த் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ராஜேஷ், மதுப்ரியன், சசிக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.