க்ரைம்

சிவகங்கை பெண் காவலரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை பெண் காவலரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுள்ள திருமணமான பெண் காவலர் ஒருவர், திருப்புவனம் அருகே தூதை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராபின் (28) என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ராபின் அந்த பெண் காவலரை சிவகங்கை அருகே காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அங்கு ராபினின் நண்பர்கள் சித்தாலங்குடியைச் சேர்ந்த மகாராஜா (25), ஹரிஸ் (21) ஆகியோர் வந்தனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து பெண் காவலரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் காவலர், காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சிவகங்கை நகர் போலீஸார் அந்த பெண் காவலரை மீட்டனர். தப்பி ஓட முயன்ற ராபின், மகாராஜா, ஹரிஸ் ஆகியோரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், டிஎஸ்பி அமல அட்வின் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து ராபின் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT