ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு
சென்னை: சென்னை திருவான்மியூர் கெனால் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மங்கல்சந்த் (63). இவர் அடையாறு இந்திரா நகர் 17-வது குறுக்குத் தெருவில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 11-ம் தேதி அதிகாலை மங்கல்சந்தின் அடகுக் கடைக்கு அருகில் வசிப்பவர்கள், செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு, கடையின் பூட்டை யாரோ உடைக்க முயற்சி செய்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மங்கல்சந்த் கடைக்கு சென்று பார்த்தபோது, கொள்ளையன் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்று கொண்டிருந்தார். உடனே மங்கல்சந்த் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு கொள்ளையனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவான்மியூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார். ஒரு செல்போன் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய கட்டிங் மிஷின், சுத்தியல், ஜாக்கி, டிரில்லிங் மிஷின், ஸ்குரூ டிரைவர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.