சென்னை: நந்தனம் அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கல்லூரி கேன்டீன் உரிமையாளர், மாஸ்டர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில் கேன்டீனும் செயல்பட்டு வருகிறது. இதை முத்துச்செல்வம் (48) என்பவர் நடத்தி வருகிறார். இந்த கேன்டீனில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர், அண்மையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். மேலும் அந்த பெண் அங்கேயே தங்கியும் இருந்தார்.
இந்த பெண்ணின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி கேன்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம், கேன்டீன் மாஸ்டர் குணசேகரன் (38) இவர்களது நண்பர் கார்த்திகேயன் (56) ஆகியோர் அந்த பெண்ணை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் அடிக்கடி கேன்டீன், கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஆகியவற்றில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் கல்லூரி காவலாளியிடம் கண்ணீருடன் முறையிட்டுள்ளார். இதையடுத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து முத்துச்செல்வம், குணசேகரன், கார்த்திகேயன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பாதிப்புக்கு உள்ளான பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பாதிப்புக்குள்ளான பெண் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே திருமணமான இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கேன்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம் கும்பகோணத்தில் தனக்கு தெரிந்தவர் மூலம் அந்த பெண்ணை ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு சென்னைக்கு 20 நாட்களுக்கு முன் அழைத்து வந்து பணியமர்த்தியுள்ளார்.
பணிக்குச் சேர்ந்த நாள் முதல் எல்லை மீற ஆரம்பித்துள்ளார். பின்னர் நண்பரையும் அழைத்து, அவர்களும் எல்லை மீறியுள்ளனர். முத்துச்செல்வம் கல்லூரியுடனான நேரடி ஒப்பந்தத்தின் மூலம் கேன்டீனை கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எனவே இவர் இதுபோல் வேறு யாரிடமாவது அத்துமீறலில் ஈடுபட்டாரா என விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். கல்லூரி வளாகத்திலேயே இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.