சென்னை: சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன பாதுகாவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்தவர் காந்தி கன்னியப்பன் (57). முன்னாள் ராணுவ வீரரான இவர், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம், சென்னை விமான நிலையத்தில் பாதுகாவலராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு அவர், சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் 2-வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை 6 மணிக்கு இவரை பணி மாற்றம் செய்வதற்காக, மற்றொரு காவலர் அங்கு வந்த போது, காந்தி கன்னியப்பன் இல்லை.
அவரை தேடிய போது, அவர் அங்குள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், விரைந்து வந்த சென்னை விமான நிலைய போலீஸார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.