க்ரைம்

கும்பகோணம் அருகே உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பனந்தாளில் புதிதாக பிரியாணி உணவகம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ‘ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்’ என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பனந்தாளைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்கள் தங்களுக்கும் பிரியாணி வாங்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு பிரியாணி சாப்பிட்ட 10 பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பட்டவர்களை திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆங்கு சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக பள்ளி மாணவர்கள் 10 பேரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், பெரியவர்கள் 2 பேர் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், இது குறித்து திருப்பனந்தாள் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்தி மற்றும் அலுவலர்கள், சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, அதை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கி செல்லும் நிலையில் தரமற்ற, குறைந்த விலையில் விற்பனை செய்யும் பிரியாணியால், அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக குறைந்த விலையில் விற்பனை பிரியாணி கடை மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT