ராஜேந்திரன்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்துறையில் நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே கிராங்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் அப்பகுதியில் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு சரிதா (40) என்ற மனைவியும் கோகிலா, பரிமளா என்ற இரு மகள்களும், நவீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரன் தனது மனைவி சரிதாவுடன் இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் உடலில் கண்டு பாய்ந்த நிலையில் ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து சந்தேகிக்கும் படி உள்ள இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு தொடர்பாக, இருவருக்கும் முன்விரோதம் உள்ள நிலையில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறில் திமுக பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கல்வராயன் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.