பெங்களூரு: பெங்களூருவில் இந்தியன் வங்கி துணை மேலாளர் கிரண் குமார் (34) லாக்கரில் இருந்த ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடி விற்றதால் கைது செய்யப்பட்டார்.
கிரிநகர் இந்தியன் வங்கி கிளையில் தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த மாதம், அதனை திரும்பபெறுவதற்கு வந்தனர். அப்போது வங்கியின் கிளை மேலாளர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை தேடிய போது அவை காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், லாக்கரில் 21 பாக்கெட்டுகளில் இருந்த 2780 கிராம் தங்க நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகைகளை கிளை மேலாளர் விடுப்பில் இருந்தபோது துணை மேலாளர் கிரண் குமார் திருடியது தெரிந்தது.
இதையடுத்து கிளை மேலாளர் கிரிநகர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் கிரண் குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், கடந்த 3 மாதங்களில் 2,780 கிராம் தங்க நகைகளை திருடி, தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர்.
இது குறித்து பெங்களூரு தெற்கு துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் ஜக்லேஷர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட வங்கியின் துணை மேலாளர் கிரண் குமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கத்தை திருடியுள்ளார். அதனை அடகு வைத்துள்ளார். அவரிடம் இருந்து இதுவரை 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம். அவர் அடகு வைத்த நிதி நிறுவனங்கள் தங்க நகைகளை தர மறுக்கின்றன. எனவே நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளோம்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான கிரண் குமார், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.25 லட்சத்தை இழந்துள்ளார். அதற்காக கடன் வாங்கியதால் அதனை அடைப்பதற்காக நகைகளை திருட ஆரம்பித்துள்ளார். நகைகளை திருடி அடகு வைத்து பணம் பெற்று அதனையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்" என்றார்.