க்ரைம்

புதுச்சேரி இசிஆர் சாலையில் ரவுடி கொலை: பட்டப்பகலில் 8 பேர் கும்பல் கைவரிசை

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி- இசிஆர் சாலையில் பட்டப்பகலில் ரவுடியை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோயில் அருகே வசித்து வந்தவர் ஆனந்த் ( எ) முண்டகண்ணு ஆனந்த் (32). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.

இன்று காலை இவர் இசிஆர் சாலையில் தனியார் மண்டபம் அருகே இருசக்கர வானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆனந்தை வழிமறித்து சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி வம்சீத ரெட்டி, லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆனந்தின் உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவீனா கார்டன் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகே உண்மை தெரியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT