சென்னை: மளிகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையன், எதிர்பார்த்த பணம் இல்லாததால் அங்கிருந்த பூண்டு மூட்டையை திருடிச் சென்றார். மயிலாப்பூர், நடுத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் பாஸ்கர் (52) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
அவர் அந்த வீட்டின் தரைத் தளத்தில் மளிகைக் கடை வைத்துள்ளார். கடந்த 16-ம் தேதி மதியம் மளிகைக் கடையை மூடி, வீட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு, கடைக்கு வந்து பார்த்தபோது, உள்ளே இருந்த மளிகைப் பொருட்கள் சிதறி 25 கிலோ பூண்டு மூட்டை திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து, கொள்ளையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி, கபாலி நகரைச் சேர்ந்த முத்து (50) என்ற கொள்ளையனை கைது செய்தனர்.
மளிகைக் கடை கல்லாப்பெட்டியில் குறைந்த அளவு பணம் இருந்ததால் விரக்தியில் எதையாவது திருட வேண்டும் என்பதற்காக 25 கிலோ பூண்டு மூட்டையை திருடி, அதை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே 10 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.