திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (34). திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், பாளையங்கோட்டையில் உள்ள உறவினரின் மகளான பிளஸ் 2 மாணவியை 2024-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியதுடன், சூடும் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவியின் தாயார் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின்கீழ் ஆனந்த கலைச் செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஆனந்த கலைச்செல்வனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு: மேலும், பாதிக்கப்பட்டமாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.