பிடிபட்ட கோவை இளைஞர் மக்சூத் அலி

 
க்ரைம்

தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு கொள்ள பிரத்யேக செயலி: கோவை இளைஞர் கைது

உ.பி. போலீஸ் நடவடிக்கை

டி.ஜி.ரகுபதி

கோவை: தீவிரவாத ஆதரவு ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்தனர்.

சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உத்தரப் பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அம்மாநில போலீஸார் விசாரித்தனர்.

தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கடந்த 12-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது நபீலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையை சேர்ந்த மக்சூத் அலி என்பவர் ஆன்லைன் தொடர்புகளை மேற்கொள்ள பிரத்யேக செயலிகள் வடிவமைத்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கோவை வந்து, கோவை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரித்தனர்.

தொடர்ந்து கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், மக்சூத் அலியை நேற்று (செப்.16) இரவு பிடித்து உத்தரப் பிரதேச மாநில போலீஸாரிடம் ஒப்படைத்தனர். உத்தர பிரதேச மாநில போலீஸார் அவரை கைது செய்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக கோவை போலீஸார் கூறும்போது, ‘‘சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டதாக அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் உத்தர பிரதேச போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் பிடிபட்ட மக்சூத் அலி ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி, அதன் மூலம் நபீல் உள்ளிட்ட சிலருடன் தொடர்பில் பேசி வந்து இருப்பதும், அவரது இரு வாட்ஸ் அப் எண்களிலும், பாகிஸ்தானை சேர்ந்த எண்கள் இடம் பெற்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உத்தரப் பிரதேச போலீஸார் மக்சூத் அலியை விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT