வெள்ளைக்காளி
புழல்: புழல் மத்திய சிறையில் தண்டனை கைதியாக பிரபல ரவுடி வெள்ளைக்காளி அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனும் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், வெள்ளைக்காளியை கொலை செய்ய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டு, அதில் முன்பணமாக ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு, 3 தண்டனை கைதிகளுடன் இணைந்து லாலி மணிகண்டன் சதித்திட்டம் தீட்டியதாக சிறைத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று சிறைக்குள் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தி வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் நேற்று மாலை சிறைத்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய 4 பேரையும் தனித்தனியாக பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலை சதி தொடர்பான தகவல்கள் உறுதியானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 தண்டனை கைதிகள் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொலை சதி முறியடிப்பு சிறைத்துறை புலனாய்வு பிரிவினரின் விரைவான நடவடிக்கையால், சென்னை புழல் மத்திய சிறைக்குள் அரங்கேற இருந்த கொலைச் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.