சென்னை: இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் அரி (46). கூலி வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியில் உள்ள சிவன் கோவில் மைதானம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தனியார் டெலிவரி நிறுவன ஊழியர் ஏசுபாதம் என்ற விக்கி (27) என்பவரை சந்தித்தார். இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
ஆனால், போதை தெளியாத அரி மீண்டும் ஆத்திரம் அடைந்து, வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு ஏசுபாதத்தை தேடி மைதானம் அருகே வந்துள்ளார். அங்கு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் அரி ஏசுபாதத்தை கத்தியால் குத்தி உள்ளார். அவர் கத்தியை பிடுங்கி அரியை தாக்கி உள்ளார். இதில், பலத்த காயமடைந்த அரி அங்கேயே மயங்கினார்.
தகவல் அறிந்த மாதவரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து படுகாயமடைந்த அரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்துக்கு பின்னர் ஏசுபாதம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து மாதவரம் போலீஸார் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.