கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 35 நாட்களில் 10 கொலைகள் நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு சொந்தமாக பாப்பம்பட்டி நந்தினி நகரில் உள்ள இடத்தில், தகரக்கொட்டகை அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தார். நேற்று இடத்தை பார்வையிட சென்றபோது, அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் காயம்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
சூலூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்து கிடந்தவரின் கையில் ராமேஸ்வர் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. வட மாநிலத்தவரை போல காணப்படும் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவை கொலை நகரமாக மாறுவதை ஏற்க முடியாது. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி பீளமேடு பகுதியில் சென்னையை சேர்ந்த இளைஞர் நவீன் (25) கொலை செய்யப்பட்டார்.
6-ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் (22) என்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அதனை இளம் சகோதரர்கள் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன் (19) சகமாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். சுமார் 35 நாட்களில் 10 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றனர்.
தொழில்துறையினர் கூறும்போது, “கோவை என்றால் அமைதியான தொழில்நகரம் என்பதுதான் அடையாளம். அந்த அடையாளத்தை இழக்கும் அளவுக்கு கொலைகள் நடந்து வருவது எதிர்காலத்தில் தொழில்துறையை நிச்சயம் பாதிக்கும். தொழில் நகரத்தில் தனிநபர் பாதுகாப்பு மிக அவசியம். அதில் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளில், போலீஸார் ரோந்து பணிகளை விரைவுபடுத்துவதுடன், வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் இடங்களில் அவர்களது விவரங்களை நிறுவனங்கள் முழுமையாக பெற்று ஆவணம் செய்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதற்கு தொழில்துறையினரும் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றனர்.