க்ரைம்

சென்னையில் அழகு நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு - தாய், மகள் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: அழகு நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகர் வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (33). இவர் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை சரிபார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், புகார் அளித்த ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுகன்யா (32) மற்றும் அவரது தாயார் சாந்தி (55) ஆகியோர் நகை மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தாய், மகள் இருவரும் அடிக்கடி ரேவதியின் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதி வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த பணத்தை திருடியதும், அதில் ஒரு பகுதியை செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சுகன்யா, சாந்தி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து செலவு செய்தது போக மீதமிருந்த ரூ.42 ஆயிரத்து 500 ரூபாய் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT