கோவை: நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள தருவையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கணவர், குழந்தைகளை பிரிந்த ஸ்ரீபிரியா, கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி, டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்தார்.
இந்நிலையில், நேற்று காலை கோவை வந்த பாலமுருகன், ஸ்ரீபிரியா தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென பாலமுருகன் அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மனைவியின் உடலைப் புகைப்படம் எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என்ற வாசகத்துடன் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்துள்ளார். தகவலறிந்த ரத்தினபுரி போலீஸார் ஸ்ரீபிரியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், பாலமுருகனைக் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ஸ்ரீபிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகன், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.