மதுரை: காவல் துறை விசாரணையில் ஜோதிடரும், கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரது உயிரிழப்பு குறித்து மதுரை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ஜோதிடர் பரமசிவத்துக்கும் அருகில் வசிக்கும் மாலதி, அவரது கணவர் பாலகிருஷ்ணனுக்கும் ஜூலை 17-ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து ஜூலை 23-ல் இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
24-ம் தேதி பரமசிவம் தனது வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டடதாக கூறி ஆகஸ்ட் 5-ல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது அவர் தவறி விழுந்ததால் போலீஸ் நடவடிக்கை தேவையில்லை என தெரிவித்ததால் இதற்கான விவரத்தை விசாரணை மேற்கொண்ட தலைமைக் காவலர், காவல் நிலைய பொதுநாள் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
பரமசிவத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியும் ஏற்க மறுத்து 6-ம் தேதி வெளியேறினார். 11-ம் தேதி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவரது உடல் நிலை மேலும் மோசமானது.
இதன்பின், அய்யம்மாள் சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார், இரு காவலர்கள் கணவரை தாக்கியதில் அவரது உடல் நிலை பாதித்துள்ளதாகவும், இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 15-ம் தேதி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
ஆனால், பரமசிவம் ஆகஸ்ட் 16-ல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். மேலூர் கோட்டாட்சியர் சங்கீதா விசாரணை நடத்தினார். 17-ம் தேதி உடற்கூராய்வு மேற்கொள்ள ஒத்துழைக்காமல் அய்யம்மாள், உயர் நீதிமன்ற அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி மதுரை 5-வது நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்திய பிறகு பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தோம். நீதிமன்ற நடுவரின் அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.