சென்னை: மது போதையில் வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தியதோடு, தற்கொலையும் செய்து கொண்டார்.
கோயம்பேடு நெற்குன்றம், பி.எச். சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் (43). இவருக்கு சத்யா (37) என்ற மனைவியும், பிள்ளைகள் பிரீத்தி (17), யாதவ் (16) உள்ளனர்.
தேவராஜ் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த தேவராஜ் மனைவி சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த தேவராஜ், சமையல் அறையிலிருந்த கத்தியால் மனைவியை குத்தியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகனும் மகளும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சத்யாவை விரைந்து மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் தேவராஜை வீட்டுக்குள் தள்ளி வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை திறக்க முயன்றபோது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.