கோபிநாத், முரளி மனோகர்
சென்னை: தமிழக மின் வாரிய தலைமை அலுவலகத்தில் திருடுபோன 34 ஹார்டு டிஸ்க்குகளும், ரூ.75 ஆயிரத்துக்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவற்றை வாங்கியவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாசாலை யில் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் அண்மையில் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரியம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஒப்பந்த ஊழியரான கோபிநாத் (31) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை திருடி, பெங்களூருவில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து 34 ஹார்டு டிஸ்க்குகளையும் கைப்பற்றினர்.
கைதான கோபிநாத்திடம் விசாரித்தபோது, திருடிய ஹார்டு டிஸ்க்குகளில் உள்ள தகவல்களை அழித்துவிட்டு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். அதில் சதி திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் ஏற்கெனவே சில நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தபோது திருடிய கணினி உதிரி பாகங்களை இதே போல் விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு சம்பவத்தில் சதி திட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
இருந்தாலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருவேளை சதி திட்டம் இருந்தால், திருடிய ஹார்டு டிஸ்க்குகளை விற்பனை செய்யாமல், அதை சேதப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதுபோல் நடக்கவில்லை.
இருப்பினும் இக்குற்ற சம்பவம் தொடர்பாக விசாரணையில் கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது என காவல் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட கோபிநாத், ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் மோசூர் ரோடு, ஜெகஜீவன் தெருவைச் சேர்ந்தவர். ஓர் ஆண்டுக்கு முன்புதான் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மேற்பார்வையாளராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
நேற்று அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். ஜூன் 19-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஹார்டு டிஸ்க்குகளை வாங்கிய பெங்களூரு காம்ப்ளக்ஸ் கடை உரிமையாளர் கர்நாடகா மாநிலம், பெங்களூரு தெற்கு பகுதியைச் சேர்ந்த முரளி மனோகர் (32) நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.