கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம் புகழூர் நகரச் செயலாளர் நந்தகுமார்

 
க்ரைம்

கரூரில் பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிக்க முயற்சி - தவெக நிர்வாகி கைது

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிக்க முயற்சி செய்த தவெக நிர்வாகியை வேலாயுதம்பாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் - கோவை சாலை என்எஸ்கே நகரை சேர்ந்தவர் மகுடபதி (45). இவர் மனைவி ப்ரியா (40). இவர் நேற்று முன்தினம் (ஆக.16) ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில் உள்ள பெற்றோரை காண கரூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வருந்தியாபாளையத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

வேட்டமங்கலம் தனியார் பள்ளி அருகே செல்லும்போது, அவரின் பின்னால் பதிவு எண் இல்லாத மோட்டார் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர், ப்ரியாவின் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது, சுதாரித்துக் கொண்ட ப்ரியா, வாகனத்தை இடதுபுறமாக திருப்பியதால் மர்ம நபரின் கை, ப்ரியா கழுத்தில் பட்ட நிலையில், தங்கச் சங்கிலி அறுபடாமல் தப்பியது. மேலும், வழிப்பறி தோல்வி அடைந்தால், மர்ம நபர் அதிவேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து ப்ரியா அளித்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், நகைப் பறிப்பு முயற்சி வழக்கு தொடர்பாக இன்று தவெக புகழூர் நகரச் செயலாளரான மூலிமங்கத்தை சேர்ந்த நந்தகுமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT