ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்ப்பட்ட ஏடிஎம் மையம்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்துக்கு நேற்று வாடிக்கையாளர் ஒருவர் வந்தபோது, ஏடிஎம் இயந்திரம் மாயமானது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, பூந்தமல்லி காவல் ஆணையர் மற்றும் வெள்ளவேடு போலீஸார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடம் விரைந்து, ஆய்வு செய்தனர்.
ஏடிஎம் மையம் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12,54,700 பணத்தை நிரப்பிய நிலையில், ஏடிஎம் இயந்திரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஏடிஎம் இயந்திரத்தில் கடைசியாக எவ்வளவு தொகை இருந்தது? எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் மர்ம கும்பல் எப்படி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த 10 நாட்களில் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற 3-வது ஏடிஎம் கொள்ளை இது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே புதுப்பேடு கிராமத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், வடமாநில கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடித்த 3-வது நாளில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரம் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.