பூந்தமல்லி: சென்னை, போரூர் அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடர்பாக நண்பர் ஒருவரை நேற்று போலீஸார் கைது செய்தனர். மற்ற 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை, புனித தோமையர்மலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொது தேர்வு எழுதுவதற்காக படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.
இச்சூழலில், நேற்று முன்தினம் இரவு மிகவும் சோர்வுடன் வீட்டுக்கு வந்த சிறுமியை பார்த்து பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னை 3 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், எஸ்ஆர்எம்சி (போரூர்) அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முதற் கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி, சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நண்பரான முகமது ஆரிப் என்ற இளைஞருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக குன்றத்தூர் பகுதிக்கு சென்றுள்ளார்.
பிறகு, முகமது ஆரிப், சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி, தன் மோட்டார் சைக்கிளில் சென்னை, போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தொடர்ந்து, தன் நண்பர்கள் இருவரை வரவழைத்துள்ளார் முகமது ஆரிப். பிறகு 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, குன்றத்தூர் அருகே உள்ள காலடிபேட்டையை சேர்ந்த முகமது ஆரிப்பை நேற்று போலீஸார் கைது செய்தனர். மற்ற இரு இளைஞர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் பகுதி சென்னை பெருநகர காவல் ஆணையரக எல்லை பகுதியிலும், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த பகுதி ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதியிலும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வசிப்பிடங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லை பகுதியிலும் வருகிறது. இதனால், இச்சம்பவத்துக்கு 3 காவல் ஆணையரக எல்லை பகுதிகளுக்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.