புதுச்சேரி: தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). இவர் மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி முகுந்தவதி (31) நேற்று வீட்டை பூட்டி விட்டு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக தவளக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி அன்பரசனை (35) கைது செய்தனர்.
விசாரணையில் அன்பரசன் விஜயேந்திரனுடன் நண்பராக பழகி, அவரது வீட்டுக்கு சகஜமாக சென்று வந்துள்ளார். முகுந்தவதி வீட்டு சாவி, பீரோ சாவி வைக்கும் இடங்களை நோட்டமிட்டு திருடியது தெரியவந்தது.
அவர் திருடிய நகைகளில் 10 பவுன் நகைகளை மட்டும் உருக்கி தனது தோழி மாலதி என்பவர் மூலம் கடலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்றதும் தெரியவந்தது. மாலதியை போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த மே மாதம் அதே ஊரைச் சேர்ந்த நந்தினி என்பவர் வீட்டினுள் புகுந்து 15 பவுன் நகையை அன்பரசன் திருடியது தெரியவந்தது.
சிறப்பாக பணியாற்றி 24 மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீஸாரை சீனியர் எஸ்பி கலைவாணன் பாராட்டினார்.