க்ரைம்

பழநி நில மோசடி: கண்காணிப்பு வளையத்தில் கைதானவர்களின் குடும்பத்தினர்

துப்பு துலக்க போராடும் சிபிசிஐடி

ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தினர் சிபிசிஐடி போலீஸாரின் ‘ரகசிய’ கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பழநி அடிவாரப் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு சட்ட விரோதமாக 2 தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 88 பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, ஜெயப்பிரகாஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், வழக்கறிஞர் அன்வர் தீன் உடல் நலக்குறைவால் சிறையில் உயிரிழந்தார்.

இதற்கிடையே, தலைமறைவாக உள்ள பத்திர எழுத்தர் உட்பட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். அதே நேரம், பல நாட்கள் திட்டமிட்டு, காத்திருந்து இந்த மோசடியை நிகழ்த்திய, மூளையாகச் செயல்பட்ட முக்கிய நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இதனால் ஏதாவது ஒரு வழியில் துப்பு கிடைத்து விடாதா? என்ற நம்பிக்கையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல், இந்த மோசடிக்கு பின்னால் யாரோ முக்கியப் புள்ளி இருப்பதாகவும் சந்தேகப் படுகின்றனர். மேலும் பணமும் கோடிக்கணக்கில் கைமாற வாய்ப்புள்ளது. அதனால், கைது செய்யப்பட்டவர்களின் பின்புலத்தில் உள்ள அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், வழக்கறிஞர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.

குறிப்பாக, கைதானவர்களின் குடும்பத்தினரின் செல்போன் மற்றும் வாட்ஸ் அப் அழைப்பு கள், சமூக வலைதள பதிவுகள், வங்கி மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் ஏதாவது ஆதாரம் கிடைக்காதா என பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை சிக்கியவர்களில் யாரோ ஒருவருக்கும் பின்புலத்திலுள்ள முக்கிய நபர் குறித்து கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

ஆனாலும் போலீஸ் விசாரணையில் தெரிவிக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் விசாரணையில் பொய் சொல்லியிருந்தாலும் உடனே ஆதாரத்தை கைப்பற்றி குற்றவாளிகளை மடக்கிவிடுவர். ஆனால், இந்த வழக்கில் இவ்வளவு வெளிப்படையாக பத்திரப்பதிவு நடந்திருந்தும்,முக்கிய குற்றவாளியை கைது செய்ய முடியாமல் இருப்பது போலீஸா ருக்கே ஆச்சர்யத்தை அளித்துள்ளது.பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம்.

SCROLL FOR NEXT