மீட்கப்பட்ட மரகத சிலை.
மதுராந்தகம்: பெருங்கரணை கிராமத்தில் கனக மலைக் குன்றின் மீது உள்ள நடுபழனி கோயிலில் திருடப்பட்ட மரகத தண்டாயுதபாணி சிலையை, தனிப்படைபோலீஸார் அருகில் உள்ள கல்குவாரிகுட்டையிலிருந்து மீட்டுள்ளனர். திருட்டு தொடர்பாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருங்கரணை கிராமத்தில் கனக மலை என்ற சிறியமலை உள்ளது. இங்குள்ள கோயிலை முருக பக்தர்கள் `நடுபழனி' என்று அழைக்கின்றனர். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு வழக்கம்போல் கோயில் பூசாரிகள் கோயிலின் நடையை சாத்திவிட்டுச் சென்றனர். மறுநாள் பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது கோயிலின் கருவறையில் இருந்த விலைமதிப்பற்ற மரகதக் கல்லாலான தண்டபாணி சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது.
தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் எஸ்பி அய்மன்ஜமால் தலைமையில் 5 தனிப்படையினர் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராவின் பதிவான காட்சிகள் மற்றும் போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(26).
ஜெயபால் (20), இளவழகன் (26) ஆகிய 3 பேரை கைது செய்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கோயிலிலிருந்து மரகதச் சிலையை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் கோயிலுக்கு அருகே புத்தூர் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் சிலையை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து சித்தாமூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான போலீஸார் குட்டையில் இருந்த மரகதச் சிலையை மீட்டனர். அந்த சிலை செய்யூர் வட்டாட்சியர் முன்னிலையில் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மரகதச் சிலை மீண்டும் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிலையை மீட்டு குற்றவாளிகளை சிறையில் அடைத்த தனிப்படை போலீஸாருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.